Tuesday, November 18, 2008

அரசாங்கத்தையும் அரசியல் கட்சிகளையும் குறை கூறும் முன்பு

மீண்டும் சந்த்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த முறை கொஞ்சம் சூடாக பதிவு போட்டதாக பல அன்பர்கள் மின்மடல் அனுப்பிருந்தார்கள். அன்பர்களுக்கு நன்றி. உண்மை எப்போதுமே சூடாகவும் கசப்பாகவும் இருக்கும் தானே? இப்போது கூட வாயில் சீனி போட்டுக் கொண்டு தான் பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் உண்மைகள் கசக்கும் அல்லவா?



நாம் அரசாங்கத்தையும் அரசியல் கட்சிகளையும் குறை கூறும் முன்பு நம்மிடையே காணப்படும் பல குறைகளை நிவர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். அடையாள அட்டை மற்றும் பிறப்பு பத்திரம் இல்லாமல் போனால் அதற்கு அரசாங்கம் தான் காரணமா? அவரவர் பிள்ளைகளுக்கு தேவையானதை செய்ய வேண்டியது யார்? சுகதிற்காக பிள்ளைகளை பெற்றுக் கொண்டால் போதுமா? நாம் இப்பொழுது 2008-இல் இருக்கின்றோம். இன்னமும் போக்குவரத்து பிரச்சனையும், எழுத படிக்க தெரியாத பிரச்சனையும் ஒரு காரணமாக எடுத்துக் கொண்டு பிள்ளைகளுக்கு முக்கியமாக தேவைப்படும் அடையாள அட்டை மற்றும் பிறப்பு பத்திரம் ஆகியவற்றை எடுத்து தராமல் இருக்கக் கூடாது. முயற்சி உடையார் இகழ்சி அடையார்.



அடுத்ததாக கல்வியைப் பற்றி பார்ப்போம். நம்முடைய சமுதாயதிற்கு சொத்தாக விளங்குவது கல்வி ஒன்றே. அது ஏட்டுக் கல்வியாக இருக்கட்டும் அல்லது தொழிற் கல்வியாக இருக்கட்டும். கல்வி ஒன்றே இன்றியமையாத சொத்து. ஆனால் இப்பொழுது எத்தனை பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வியின் பால் அக்கறை கொண்டுள்ளனர்? "பையன் ஏதோ படிக்கிறான்" என்று கூறுவோர் பலர். பள்ளிக்குச் சென்று ஆசிரியருடன் கலந்துரையாடி பிள்ளையின் கல்வி வளர்ச்சிக்காக பாடு படும் பெற்றோர் எத்தனைப் பேர்? எத்தனைப் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பொது நூல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்? நூல் நிலையம் என்பது பொதுவானதொரு வசதி. அங்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். நமது பிள்ளைக்ளின் கல்வித் தரம் உயரமால் இருந்தால் யார் காரணம்? மீண்டும் அரசாங்கமா? அல்லது வழக்கம் போலவே சொல்லடி படும் தமிழ்ப்பள்ளி + ஆசிரியர்களா? அஸ்ட்ரோ இல்லாத வீட்டை விரல் விட்டு எண்ணி விடலாம் என்பது போல ஆங்கிலம்/மலாய் நாளிதழ் வாங்கும் பெற்றோரையும் எண்ணி விடலாம். மறுபடியும் கூறுங்கள்; பிள்ளையின் கல்வி வளர்ச்சி யார் கையில் உள்ளது? 30% ஆசிரியர் + 30% பெற்றோர் + 40% மாணவர் = 100% வெற்றி. பெற்றோரின் அந்த 30% இருக்கிறதா?



அடிப்படையில் ஆட்டம் கண்ட மாணவன்/வி இடைநிலைப்பள்ளியில் என்ன செய்வான்/ள்? இளமைத் திருவிழா தான். பிறகு? கண்டதே காட்சி கொண்டதே கோலம். 17ல் படி தாண்டுதல் 20ல் 3பிள்ளைகளுக்கு தாய்/தந்தை.......உருப்படியான வேலையின்மையினால் கண்ட-கண்ட தொழிலில் ஈடுபடுதல்...................................................அப்பா சிறையில். அம்மா பிள்ளைகளுடன் வறுமையில். யார் காரணம்? மறுபடியும் அரசாங்கமா? வேறு வழி இல்லாமல் அம்மா மொத்த பிள்ளைகளுடன் தண்டவாளடத்தில் போய் உட்கார்ந்த கொடுமை அனைவருக்கும் நினைவு இருக்கிறது தானே?


இப்படி நிறைய குறைகள் நம்மிடையே உள்ளது. இவற்றையெல்லாம் நாமாகவே உணர்ந்து திருந்த வேண்டும். திருடனாய்ப் பார்த்து திருந்தினால் தான் திருட்டை ஒழிக்க முடியும். அது போலவே நம்முடைய சிந்தனை மாறினால் தான் எல்லாமும் மாறும். எதற்காக கூறுகிறேன் என்றால் நமக்காக போராடி சிறையில் வாடும் நம் சகோதரர்கள் வெளியில் வந்து பார்க்கும் பொழுது மாற்றம் கண்ட சமுதாயத்தைப் பார்க்க வேண்டும். எதுவுமே உறுதியாக இல்லாத பட்சத்தில் எதைப் போராடி பெற வேண்டும் என்று நினைக்கிறீகள்?









Saturday, November 15, 2008

தமிழ்ப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பின் தங்கியவர்கள்

மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. கடந்த பதிவில் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்ட அன்பு நண்பர் சதீசு அவர்களுக்கும், என்னுடைய ஹீரோ Cikgu சுலைமான் அவர்களுக்கும் நன்றி. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட யூ.பி.எஸ்.ஆர் முடிவில் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் (நான் பணி புரியும் பள்ளி) சேர்ந்த 1 மாணவர் 7 - ஏக்களும் 2 மாணவிகள் 6- ஏக்களும் 4 மாணவிகள் 5-ஏக்களும் பெற்றனர். ஆசிரியர் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சி. ( நான் கணிதம் போதித்தேன்). இவ்வளவு தானா என்று ஒரு சிலர் கேட்கலாம். இருந்தாலும் இந்த முடிவுகளைப் பெறுவதற்கு நாங்கள் பட்ட பாடு என்ன என்பதனை பட்டவர்கள் புரிவார்கள். ஓருவர் தானா என்று கேட்க மாட்டார்கள். கேட்டாலும் பரவாயில்லை. எங்களின் முயற்சி வீண் போகவில்லை.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள். இப்பொழுது சற்று பின்தங்கிய மாணவர்களைப் பார்ப்போம். வெற்றி பெற்ற மாணவர்களுடன் தான் இவர்களும் படித்தார்கள். ஆசிரியர்களும் ஒரே மாதிரியான கவனிப்பை தான் வழங்கினார்கள். அப்புறம் எப்படி பின்தங்க முடிந்தது? பதில் இல்லா கேள்வியிது. கல்வி அமைச்சு, மாநில கல்வி இலாக்கா, மாவட்ட கல்வி இலாக்கா ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்புறம் மிக-மிக முக்கியமாக தலைமையாசிரியர்கள் குற்றம் சொல்வது ஆசிரியர்களை. .................. சரி - சரி ஆசிரியரும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒப்புக் கொள்கின்றேன். ஆனால் அனைவரும் மோசமான ஆசிரியர்கள் இல்லை.

பள்ளிக்கு பல மாத காலமாக வராமல் இருக்கும் மாணவர்களை என்ன செய்ய? இல்லை சம்மந்தப்பட்ட பெற்றோர்களை என்னவென்று சொல்ல? காரணம் கேட்டால் காரணம் ஆயிரம். ஆசிரியர் அடித்து விட்டால் மறுநாள் பள்ளியில் திருவிழா தான். அதிலும் ஒரு கேள்வி கேட்பார்கள் பாருங்களேன் " ஒங்க புள்ளையா இருந்தாக்கா அடிப்பீங்களா " இதற்கு என்ன பதில் கூற?

என்னுடைய சொந்த அனுபவம் இது. படியுங்கள்.

இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வு ஆரம்பிக்க இரண்டு நாட்கள் மிஞ்சி இருக்கும் வேளையில் ஆறாம் ஆண்டு மாணவர் பள்ளியில் வந்து இணைகிறார். அய்யோடா என்று அனைவரும் அலறினோம்...என்ன காரணம்? அம்மாணவர் மூன்று மாத காலமாக பள்ளிக்கே செல்லவில்லை. காரணம் என்ன்? Transport Problem என்ற ஆங்கில காரணம். என்னதான் செய்து விட முடியும்? ஏதோ வண்டி ஓடியது. வெளியில் என்ன பேச்சு வரும் தெரியுமா? "தமிழ்ப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் பின் தங்கியவர்கள்".
இது ஒரு பகுதி தான். இன்னும் நிறைய.
இப்படி நிறைய குறைகளை நம்மிடையே வைத்துக் கொண்டு வேறு எங்கெங்கோ செல்கின்றோம். நாம் பெற்ற பிள்ளை முறையாக பள்ளிக்குச் செல்கின்றானா, ஒழுங்காக படிக்கின்றானா போன்றவற்றையெல்லாம் கவனிக்க வேண்டியது யார்? பிறகு இடைநிலைப் பள்ளிக்குச் சென்றவுடன் மகன்/ள் நடத்தையை கவனிக்க வேண்டியது யார்? அவர்களின் நட்பு வட்டத்தை அறிய வேண்டியது யார்? இடைநிலைப்பள்ளியில் நிகழும் பிரச்சனைகளுக்கு காரணம் என்ன? அதிலும் நம்மின மாணவர்களின் அட்டகாசம் அட ராமா.... அட ராமா...... அட ராமா.....என்னவென்று சொல்ல? கேட்டால் வயது அப்படியாம். பிறகு திருந்தி விடுவார்களாம். எப்படி திருந்த? எப்பொழுது திருந்த? வயது கடந்த பின்பா? கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரமா? பலே-பலே. நம்முடைய அஸ்திவாரம் உறுதியாக இருந்தால் தான் எதையும் தட்டிக் கேட்க முடியும். எதுவும் உறுதியாக இல்லாத பட்சத்தில் எத்தனை
"25 நவம்பர்"கள் வந்தாளும்........

Thursday, November 13, 2008

ஆசிரியராக இருந்தால்


சில நாட்களாக உங்கள் அனைவரையும் சந்திக்க முடியவில்லை. நான் பணி புரியும் பள்ளியில் தொடர்ச்சியான நடவடிக்கைகள். கடந்த புதன்கிழமை தான் பரிசளிப்பு விழா நடந்தேறியது. சொல்ல முடியாத அளவிற்கு உடல் அசதி. என்ன செய்ய? தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராக இருந்தால் சகலமுமாக இருக்க வேண்டும். அது இது என்று சொல்லிக்கொண்டு இருக்க முடியாது. அதற்கு நேரமும் இருக்காது.

பரிசளிப்பு விழாவிற்கு முன்பு முதல் நாள் அதாவது செவ்வாய்க்கிழமை பள்ளி மாணவர்களுடன் காவல் துறையினர் ஒரு நாள் என்ற நிகழ்வு நடைப்பெற்றது. ஆறாம் ஆண்டு முடித்து முதல் படிவத்திற்கு காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. ASP பாலன் மற்றும் Chief Insp மாதவன் ஆகியோர் நிறைய தகவல்களை மாணவர்களுடன் பறிமாறிக் கொண்டனர். அதிகாரிகள் சொன்ன அறிவுரைகளை காதில் போட்டுக் கொண்டு புத்திசாலித்தனமாக மாணவர்கள் நடந்துக் கொண்டால் நிச்சயம் வெற்றி பெறலாம். நம்முடைய எதிர்ப்பார்ப்பும் அதுதான். நல்லதயே நினைப்போம்.

ஆரம்பப் பள்ளியில் படிக்கும் பொழுது பெற்றோர்கள் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதைப் போல இடைநிலைப்பள்ளிக்கு சென்ற பின்பும் கவனிப்பும் கண்டிப்பும் இருக்க வேண்டும். இடைநிலைப்பள்ளியில் நம்மின மாணவர்கள் போடும் ஆட்டத்தைப் பற்றிக் கூற வார்த்தை இல்லை. கைமீறிப் போனப் பின்பு அழுது ஒரு புண்ணியமும் இல்லை அல்லவா.....




Monday, November 3, 2008

யோசித்துப் பார்ப்போமா ? வாருங்கள்....

நல்லார் எனதாம் நனி விரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

Thursday, October 30, 2008

படித்ததில் பிடித்தது - நீங்களும் படியுங்களேன்.....

பலர் கர்மா என்ற சொல்லையோ அதன் விளக்கத்தையோ புரிந்து கொண்டிருந்தாலும், அன்றாட வாழ்வியலில் அதன் பொருளை உணர்வதில்லை.தனக்கு மிகவும் நெருங்கிய உறவொன்றை இழந்த நண்பர் ஒருவர் கதறினார் - "எனக்கு மட்டும் இறைவன் ஏன் இப்படி செய்கிறான், நான் என்ன பாவம் செய்துவிட்டேன்..." என்று.ஆக்கமும், நடத்தலும், நீக்கலும் அவன் செயல்தான் என்றாலும், ஒருவருடைய கர்மாவினை இறைவன் நிர்ணயிப்பதில்லை. ஒருவருக்கு உடலில் புற்று நோய் வந்து உடல் மெலிந்து போகவும், இன்னொருவர் திடகாத்திரமான உடல் கட்டுடன் விளையாட்டு வீரராக புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும் என்றும் எங்கிருந்தோ இறைவன் நிர்ணயிப்பதில்லை. எப்படி அவரவர் செய்யும் உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு அவர் உடற்கட்டு அமைகிறதோ, அதுபோல, உங்கள் ஆத்ம சக்தியினை எந்த அளவிற்கு நீங்கள் பயற்சியில் ஈடுபடுத்துகிறீர்களோ, அதற்கேற்றாற்போல் உங்கள் கர்மாவும் அமையும்.இன்னமும் சொல்லப்போனால், கர்மாவே உங்களுக்கு ஒரு ஆசானாக ஆக்கிக் கொள்ள முடியும். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம் கருமமே கட்டளைக்கல்லெனத் தெளிதலும், எக்கருமம் எந்த விளைவினை ஏற்படுத்தும் என்னும் அனுபவ அறிவும், இருந்தால், அதுவே அவரவர்க்கு கீதா உபதேசம்.கர்மா என்பது தலைவிதி அல்ல. அது முன்பே நிர்ணயிக்கப்பட்டது அல்ல. மேலே இருந்து கொண்டு எந்த ஒரு கிரகமோ, நட்சத்திரமோ, ஏன் கடவுளே கூட, இந்தா, பிடி, உனக்கு இந்த கர்மா என்று வழங்குவதில்லை. நம் வாழ்வில் நடக்கும் எந்த சம்பவத்தையும் இறைவன் முன்பாகவே தீர்மானிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், இறைவன் நமக்கு எந்த சோதனையும் கூட தருவதில்லை. நம் கர்மாவினை நாமே தீர்மானிப்பதால், என்ன செய்தால் நல்ல கர்மா கிட்டும்? எவ்வாறு கர்மாவினை மேலாண்மை செய்யலாம்?. இதோ, உலகப்பொது மறையில் இருந்து பத்து மேலாண்மை முத்துக்கள்:
1. பதிலடி கொடுக்கத் தேவையில்லை. பதிலடி கொடுப்பதால், புதிய கிளைக் கர்மா உருவாகிட வழி வகுக்கும். அகத்தாய்வு செய்யின், அதற்கு அவசியமே இல்லை என்பதறிவீர்.
மறத்தல் வெகுளியை யார்மட்டும் தீயபிறத்தல் அதனான் வரும். (303)

2. நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ளவும். தீமை விளையும் போது, அதற்கு காரணமானவரை பொறுப்பாக்குவது இயற்கை. ஆனால், நன்மையும் தீமையும் மற்றவரால் வருவதல்ல, அதற்கு அவர் ஒரு கருவி மட்டுமே உணரவும். ஏனெனில்,
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன் (379)

3.மறப்போம், நன்மை செய்வோம். தனக்கு தீமை செய்தவரின் மேல் சினம் கொண்டால், அந்த சினத்தின் விளைவால், அடி மனது எப்போதும் கனன்று கொண்டே இருக்கும். ஆனால் அதை மறந்து, நன்மை செய்யும்போது, அதுவே நல்ல கர்மாவாக திரும்பும்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல். (314)

4. விளைவுகளை யோசிக்கவும். இன்னொருவருக்கு துன்பம் விளைவித்தல் எளிது. அதன் விளைவு தனக்குத்தான் கர்மாவாக வந்து முடியும் என்ற அறிந்தவர், அதனாலாவது, மற்றவர்க்கு துன்பம் தராமல் இருப்பர்.
நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர். (320)

5. தீவினை வேண்டாம். இன்னொருவரின் துன்பமும், தம் துன்பம் என்று கருதினால், தீவினைகளை தவிர்க்கலாம்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போல் போற்றாக் கடை. (315)

6. இறையருள் நாடவும். நீங்கள் தனிமரமாய் உங்கள் கர்மாவினை தூக்கிக் கொண்டு திரிய வேண்டியதில்ல. எல்லா வளமும் அருள காத்திருக்கிறான், எல்லாம் வல்லவன். அவன் அருளை நாடினால், ஏற்கனவே செய்த வல்வினைகளை தகர்த்திடும் மன உறுதியும், தூய செயல் ஆற்றலும் கிட்டும்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்குயாண்டும் இடும்பை இல. (4)

7. ஏற்கனவே இருக்கும் கர்மாவை குறைக்க/தீர்க்க முயலவும். ஒருவர் அறவழிகளில் தொடர்ந்து நடந்து வந்தால், ஏற்கனவே செய்த தீவினைகளால் வரப்போகும் துன்பமும் குறைந்து விடும்.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாஞ் செயல். (33)

8. அறவழியில் நடந்து நல்ல கர்மாவினை சேர்க்கவும். ஏனெனில்,
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல். (38)

9. எந்த சமயத்திலும் யாரையும் இழிவு செய்ய வேண்டாம். ஏனெனில்,
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலை. (317)

10. அகத்தேடல் எனும் அருந்தவத்தில் ஈடுபடவும்.அகம் ஒளிரும் நிலை பெற்றிட, உள்ளார்ந்து, உள் மனதில் இறைவனின் பிம்பத்தினை தேடுவர். அவர் நற்சிந்தனையுடன் செயல்பட்டு தமது கர்மா முழுதும் தீர்த்திட, பிறவிப் பெருங்கடலை கடந்திட அருள் பெறுவர்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்சுடச்சுட நோக்கிற் பவர்க்கு. (267)
மொத்தத்தில் நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும்.இதில் இறைவனின் பங்கென்ன என்று கேட்டால், இறைவனை வேண்டி நிற்பதனால், கர்மாவில் குறுகிட்டு அதை குறைப்பதிலோ, அல்லது தற்காலிகமாக தள்ளிப்போடவோ அவனால் இயலும். சரி, நல்ல கர்மாவையே ஒருவர் பெரிதும் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்றால், அவருக்கு இறைவனின் துணை தேவையில்லையா என்று கேட்கலாம். அப்படிப்பட்ட ஒருவருக்கு, இறைவன் இன்னொன்றாக இருக்காது. அவர் ஆன்மீகவாதியாக இருப்பாரென்றால் தான் நடக்கும் அவன் வழியே அற வழி என்பார். எங்கெங்கும் நிறைந்தவன் இறைவன் என்று எல்லாவற்றிலும் இறைவனைப் பார்ப்பார் அவர். ஆன்மீகத் தேடலில் அடிஅடியாய் எடுத்து வைத்து, தம் ஆத்ம சக்தியினை வளர்த்துக் கொண்டவருக்கு, மொத்த கர்மாவும் எளிதில் தீர்ந்திடும். மறுபிறவி இல்லா நிலையும் வாய்க்கப் பெற்றிடும்.ஜோதிடமும் கர்மாவினால் இப்படி நாம் நடக்கலாம் என்பதை, கோள் மற்றும் நட்சத்திர அமைப்புகளின் உதவியுடன் கணித்துச் சொல்வதுதான். "கோள் என்ன செய்யும், கொடுங்கூற்று என்ன செய்யும், ஈசன் அவன் அருள் இருக்கையிலே?".

Sunday, July 13, 2008

என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா....

வணக்கம்.
அன்பர்களே, நான் பதிவுலகிற்கு புதியவன். இப்பத்தான் என்னுடைய முதல் அடியை வைத்துள்ளேன். என்னை வாழ்த்தி உங்களுடன் என்னையும் சேர்த்துக் கொள்வீர்களா....